![]() | ![]() |
மத்திய பிரதேசத்தில் அங்கன்வாடியில் முட்டை வழங்க போவதாக தெரிந்தவுடன் இளம் தாயான ராமாக்சி சவுருக்கும், அவரது நான்கு வயது மகன் சாகரின் முகத்தில் மகிழ்ச்சி தெரிந்தது. “அவனுக்கு முட்டை பிடிக்கும். அவன் முட்டை சாப்பிடுவதை விரும்புகின்றோம்” என்று ராமாக்சி சவுர் கூறுகின்றார். சாகரின் முகம் மலர்கிறது.மத்திய பிரதேசம், நிவாரி மாவட்டத்தில் உள்ள பஞ்சபுரா மஜிரா என்ற இடத்தில் உள்ள பழங்குடி வகுப்பைச் சேர்ந்தவர் ராமாக்சி சவுர். இவரது அண்டை வீட்டுக்காரர் ஹரிராம் சவுர், “அங்கன்வாடியில் முட்டை வழங்குவதில் என்ன பிரச்னை? முட்டையின் சுவை தெரியும்” என்கின்றார்.
மத்திய பிரதேசத்தில் 17 மாவட்டங்களைச் சேர்ந்த 1 லட்சத்து 14 ஆயிரம் பேர், அங்கான்வாடிகளில் பரிமாறப்படும் உணவில் முட்டையை சேர்க்க வேண்டும் என்றும், உணவு பாதுகாப்பிற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கையெழுத்திட்டு மனு அளித்துள்ளனர். ‘உணவுக்கான உரிமை இயக்கம்’ (Right to Food Campiagn), அங்கன்வாடி மையங்களில் முட்டை கொடுக்க வேண்டும் என்று கையெழுத்து இயக்கத்தை நடத்தியுள்ளது. “இந்த மனுவை முதலமைச்சரின் அலுவலகத்தில் ஒப்படைத்துள்ளோம்” என்று உணவுக்கான உரிமை இயக்கத்தைச் சேர்ந்த சச்சின் ஜெயின் தெரிவித்தார்.
மத்திய பிரதேசத்தை ஆளும் காங்கிரஸ் அரசு, அடுத்த நிதியாண்டு முதல் (ஏப்ரல்) பழங்குடி மக்கள் அதிகம் வாழும் 89 மண்டலங்களில் உள்ள அங்கன்வாடிகளில் முட்டை விநியோகிக்க முடிவு செய்துள்ளது. மாநில அரசின் நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக, 1 லட்சத்து 14 ஆயிரம் பேர் கையொப்பம் இட்டு மனுவை சமர்ப்பித்துள்ளனர். அதே நேரத்தில் எதிர்கட்சியாக உள்ள பாரதிய ஜனதா, அங்கன்வாடிகளில் முட்டை விநியோகிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. “குழந்தைகளை முட்டை சாப்பிட வைப்பது இந்திய கலாச்சாரத்திற்கு எதிரானது என்றும், இதற்கு எதிர்ப்பு தெரிவிப்போம்” என்று பா.ஜ., அறிவித்துள்ளது.
முந்தைய பாரதிய ஜனதா அரசில் முதல்வராக இருந்த சிவராஜ் சிங் சௌகான், 2015ல் அங்கன்வாடிகளில் முட்டை வழங்கும் யோசனையை தடுத்து நிறுத்தினார். அப்போது சிவராஜ் சிங் சவுகான், நான் முதலமைச்சராக இருக்கும் வரை அங்கன்வாடிகளில் முட்டை வழங்கப்படாது என்று அறிவித்தார். பா.ஜ.,தேசிய பொதுச் செயலாளர் கைலாஷ் விஜயவர்கியா, முட்டை வழங்குவதை பா.ஜ., கடுமையாக எதிர்க்கும் என்று கூறியுள்ளார். இதற்கும் மேல் ஒரு படி மேலே சென்று மத்திய பிரதேச சட்டசபை எதிர்கட்சி தலைவரான பா.ஜ.,வைச் சேர்ந்த கோபால் பர்கவா, “குழந்தைகளுக்கு முட்டை சாப்பிட வைப்பது, அவர்கள் பெரியவர்கள் ஆன பிறகு அவர்களை மனித மாமிசத்தை தின்பவர்களாக ஆக்கிவிடும்” என்று எச்சரித்துள்ளார்.
சத்திஸ்கர் மாநில காங்கிரஸ் அரசு சில மாதங்களுக்கு முன் முட்டை வழங்கும் முடிவை எடுத்தது. அங்கும் இதே போல் எதிர்ப்புகள் கிளம்பின. ஆனால் சத்திஸ்கர் காங்கிரஸ் முதல்வர் பூபேஷ் பாகல் அரசு முட்டை வழங்குவதில் உறுதியாக இருந்தது. தமிழ்நாடு, ஜார்கண்ட், கர்நாடகா, பீகார் உட்பட பல மாநிலங்களில் பள்ளிகளில் மதிய உணவு திட்டத்தில் முட்டை வழங்கப்படுகிறது. இதில் கர்நாடகாவில் பா.ஜ., ஆட்சி நடைபெறுகிறது. பீகாரில் பா.ஜ.,கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. ஜார்கண்ட்டில் பா.ஜ., ஆட்சி நடைபெற்றது. இப்போது இந்த மாநில சட்டசபை தேர்தல்கள் நடந்து கொண்டுள்ளன.
மத்திய பிரதேச பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை அமைச்சர் இம்ராதி தேவி கூறுகையில், “பாரதிய ஜனதா சொல்வதை பற்றி நாங்கள் ஏன் கவலைப்பட வேண்டும்? நமது குழந்தைகளுக்கு சத்து கிடைத்தால், குழந்தைகளின் ஊட்டச்சத்து பற்றாக்குறை போகும் எனில், அவர்களுக்கு முட்டை கொடுப்போமே. நாங்கள் யாரையும் முட்டை சாப்பிட நிர்ப்பந்தம் செய்யவில்லை. எந்த குழந்தை முட்டை சாப்பிடுமோ, அவர்களுக்கு மட்டும் கொடுப்போம். மற்றவர்களுக்கு வேறுவிதமான உணவு வழங்குவோம். நமது வீட்டில் அசைவ உணவு சமைக்கும் போது, யாருக்காவது பிடிக்காவிட்டால், அவர்களுக்கு வேறு உணவு சமைப்பதில்லையா? நமது குழந்தைகள் ஆரோக்கியமானவர்களாக இருக்க வேண்டும். அவர்கள் ஆரோக்கியமானவர்களாக வளரவேண்டும்” என்று கூறினார்.
மத்தியபிரதேச பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை முதன்மைச் செயலாளர் அனுபம் ராஜன், “இது பற்றி சமீபத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் முதலமைச்சர் கமல்நாத் முன்னிலையில் அங்கன்வாடிகளில் முட்டை வழங்குவது பற்றி ஆலோசித்தோம். பழங்குடி மக்கள் வாழும் 89 மண்டலங்களில் முட்டை வழங்க தேவையான நடவடிக்கை எடுப்பது என முடிவு செய்யப்பட்டது. ஊட்டச்சத்து குறைபாட்டை போக்குவதில் முட்டைக்கு உள்ள பங்கு பற்றி நன்கு தெரியும். பழங்குடி மக்கள் வாழும் பகுதிகளில் ஊட்டச்சத்து குறைபாடு சராசரி அளவை விட அதிகமாக உள்ளது. பழங்குடி மக்கள் முட்டை சாப்பிடுகின்றனர். வாரத்திற்கு மூன்று முறை முட்டை வழங்க வருடத்திற்கு ரூ.113 கோடி செலவாகும் என்று தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், “அங்கன்வாடி மையங்களில் முட்டை வழங்குவதால் உள்ளூரில் கோழி வளர்த்து, முட்டை வழங்குபவர்களுக்கு வருவாய் கிடைக்கும். பள்ளிக்கூடங்களில் மதிய உணவு திட்டத்தில் குறிப்பாக பதின்மர் இளம் பெண்கள் படிக்கும் பள்ளிக்கூடங்களில் முட்டையும் சேர்க்கப்படும்” என்று தெரிவித்தார்.
அங்கன்வாடிகளில், மதிய உணவு திட்டத்தில் முட்டை வழங்குவதற்கு ஊட்டச்சத்து நிபுணர்கள் மத்தியில் மட்டுமல்லாது, மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு இருப்பதை கையெழுத்து இயக்கமே எடுத்துக் காட்டுவதாக உள்ளது. “பழங்குடி மக்களும், கிராமப்புறங்களில் வாழ்பவர்களும் அங்கன்வாடி மையங்களில் முட்டை வழங்க இருப்பதால் மகிழ்ச்சி அடைகின்றனர் என்று நிர்வாரி மாவட்டத்தைச் சேர்ந்த மஸ்ட்ராம் கோஷ் என்பவர் தெரிவித்தார். இவர் உணவுக்கான உரிமை இயக்கத்தைச் சேர்ந்தவர்.
ஹைதராபாத்தில் உள்ள தேசிய ஊட்டச்சத்து நிறுவனத்தின் (National Institute of Nutrition) முன்னாள் துணை இயக்குநர் டாக்டர். வீணா சத்ருங்னா கூறுகையில், “ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு முட்டை வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள், அதிகாரத்தில் அமர உரிமையில்லை. குழந்தைகளுக்கு முட்டை சிறந்த உணவு. இது கலாச்சாரப்படி ஏற்றுக் கொள்ளப்பட்டது. குழந்தைகள் விரும்புவார்கள். எளிதில் ஜீரணமாகும். மக்களில் 85 சதவிகிதம் பேர் முட்டையை வழக்கமாக சாப்பிடுகின்றனர். முட்டையில் அதிகம் புரோட்டீன் உள்ளது. வைட்டமின் சி தவிர மற்ற எல்லா சத்துக்களும் உள்ளன. நாம் முட்டை சாப்பிட விடாமல் தடுத்து, நமது குழந்தைகளை பட்டினி போடுகின்றோம். முட்டையால் எவ்வித பாதிப்பும் இல்லை. ஆறு மாதத்திற்கும் குறைவான குழந்தைகளுக்கு முட்டையை கொடுக்காதீர்கள். மற்றவர்கள் ஏழைகளை பற்றி கவலைப்படுகின்றார்களா? கர்நாடகா போன்ற மாநிலங்களில் முட்டையை தீவிரமாக எதிர்ப்பவர்களினால், சில சமயங்களில் விஞ்ஞானிகள் கூட பின்வாங்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. குழந்தைகளுக்கு முட்டை அவசியம். இதற்கு ஈடாக எந்த காய்கறியும் இல்லை” என்று தெரிவித்தார்.
தேசிய குடும்ப நல கணக்கெடுப்பின்படி (National Family Health Survey—NHFS4), மத்திய பிரதேசத்தில் 42 சதவிகித குழந்தைகள் சரியான வளர்ச்சி இல்லாமல் இருக்கின்றனர். 42.8 சதவிகித குழந்தைகள் எடை குறைவாக இருக்கின்றனர். ஊட்டச்சத்து குறைபாடு பழங்குடி மக்கள் மத்தியில் அதிகமாக இருக்கின்றது. பழங்குடியினர் குழந்தைகளில் 48.2 சதவிகிதம் போதிய வளர்ச்சியின்மை, 51.5 சதவிகிதம் எடை குறைவாக உள்ளது. தாழ்த்தப்பட்ட குழந்தைகளில் 47.6 சதவிகிதம் போதிய வளர்ச்சியின்மை, 45.9 சதவிகிதம் எடை குறைவாக உள்ளது என்று உணவுக்கான உரிமை இயக்கத்தைச் சேர்ந்த சச்சின் ஜெயின் தெரிவித்தார். இவர் செப்டம்பர் மாதம் அங்கன்வாடி மையங்களிலும், மதிய உணவு திட்டத்திலும் முட்டை சேர்க்க வேண்டும் என்று முதல்வர் கமல்நாத்திற்கு கடிதம் எழுதியுள்ளார்.
முதல்வர் கமல்நாத்திற்கு சச்சின் ஜெயின் எழுதிய கடிதத்தில், தேசிய முட்டை ஒருங்கினைப்பு குழுவின் கருத்துப்படி, முட்டை இயற்கையாகவே கிடைக்கும் சரிவிகித சத்துக்கள் உள்ள உணவு. இதில் புரோட்டீன் சத்து முழுமையாக இருக்கிறது. ஏனெனில் முட்டையில் ஒன்பது விதமான அமினோ அமிலங்கள் உள்ளன. முட்டைக்கு பதிலாக பாதாம் பருப்பு வழங்குவதால் அதிக செலவு ஆகும். ஒரு முட்டையில் 6 கிராம் புரோட்டீன் உள்ளது. இதே சத்து கிடைக்க வேண்டும் எனில் ஒரு குழந்தை 25 பாதாம் பருப்பை சாப்பிட வேண்டும் என்று கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
சிலர் முட்டைக்கு பதிலாக பால் வழங்கலாம் என்கின்றனர். பால் வழங்குவது என்பது சிரமமானது. பால் பாதுகாப்பாக வைப்பதற்கு பிரிட்ஜ் வேண்டும். பாலை காய்ச்சி குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும். முட்டைக்கு இவ்வித பிரச்னைகள் இல்லை. பாலுடன் ஒப்பிடுகையில் முட்டை கெட்டுப்போக வாய்ப்பு குறைவு.
அங்கன்வாடிகளிலும், சத்துணவு கூடங்களிலும் குழந்தைகளுக்கு முட்டை வழங்குவதை கண்காணிப்பது எளிது. முட்டை கொடுக்கவில்லை எனில் குழந்தைகளே புகார் தெரிவித்து விடுவார்கள். ஆனால் பால் 150 மில்லி லிட்டர் கொடுக்கின்றனரா? 20 கிராம் பாதாம் வருப்பு கொடுக்கின்றனரா என்பதை கண்காணிப்பது சிரமம்.
(சமீபத்தில் பாரதிய ஜனதாவைச் சேர்ந்த ஆதித்யநாத் முதலமைச்சராக உள்ள உத்தரபிரதேச மாநிலத்தில் சொன்பத்ரா மாவட்டத்தில் செயல்படும் அரசுப் பள்ளியான ‘சலாய் பன்வா தொடக்கப்பள்ளி’யில் மதிய உணவுத் திட்டத்தில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் பாலில், “ஒரு வாளி தண்ணீரில் 1 லிட்டர் பால்” ஊற்றி கலந்து, 81 குழந்தைகளுக்கு ‘பால் தண்ணீர்’ கொடுக்கப்பட்ட சாதனை வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரலது கவனத்தை ஈர்த்தது.)
முட்டையின் சிறப்பு பற்றி சச்சின் ஜெயின் கூறுகையில், “. அதிக புரதச்சத்து உள்ள சோயா, நிலக்கடலை போல் அல்லாமல், முட்டை எளிதில் ஜீரணமாக கூடியது. 100 சதவிகித சத்துக்களை உடல் கிரகித்துக் கொள்ளும். முட்டை சாப்பிடும் குழந்தைகளுக்கு முட்டை வழங்குவதில் எவ்வித ஊசலாட்டமும் இருக்க கூடாது. குறிப்பாக ஊட்டசத்து குறைபாடு உள்ள மத்திய பிரதேஷம் போன்ற மாநிலங்களில் ஊசலாட்டம் இருக்கவே கூடாது” என்று தெரிவித்தார்.
வெங்காயம் சாப்பிடாதவர்களுக்கு எப்படி வெங்காய விலை பற்றி கவலையில்லையோ, அதே போல் முட்டை சாப்பிடாதவர்கள், முட்டையை பற்றி கவலைப்படாமல் இருப்பதே சாலச் சிறந்தது.
நன்றி. தி வீக் ஹெல்த் இதழில் சிராவானி சங்கர்.