சென்னை,
தமிழகத்தில் கன மழையால் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. மீட்பு மற்றும் நிவாரண பணிகளை அந்தந்த மாவட்ட அமைச்சர்கள் அங்கேயே தங்கியிருந்து மேற்கொள்ள வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று உத்தரவிட்டுள்ளார்.
சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் ஜெயக்குமார் ,உதயகுமார் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.
சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 2நாட்களாக கனமழை பெய்த நிலையில், சாலைகளில் தண்ணீர் தேங்கின. தாழ்வான பகுதிகளில் மழை நீர் சூழ்ந்தது.
இன்றும் சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்தது.
தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் பெய்த கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகள், மீட்புப்பணிகள், நிவாரண பணிகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று ஆலோசனை நடத்தினார்.
மழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு அந்தந்த மாவட்ட அமைச்சர்கள் அங்கேயே தங்கியிருந்து நிவாரண பணிகளை மேற்கொள்ள வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
அதிகாரிகளுக்கு சில அறிவுரைகளை வழங்கிய முதலமைச்சர், பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு மாநில பேரிடர் மீட்பு படையினரை அனுப்ப தயார் நிலையில் வைக்குமாறும் உத்தரவிட்டுள்ளார்.