08 அக்டோபர் 2019, 07:11 PM
சமூக வலைதளங்களில் சினிமா பிரபலங்களை சீண்டி பார்ப்பது சிலரின் வேலையாக இருக்கிறது. அப்படி சீண்டுபவர்களுக்கு உடனுக்குடன் பதிலடி கொடுத்து விடுகிறார் யாஷிகா ஆனந்த். இது குறித்து அவர் கூறியதாவது:-
“சினிமாவில் நடிப்பது போலத்தான் நிஜத்திலும் நடிகர்கள் இருப்பார்கள் என நினைக்கும் வழக்கம் இன்னும் இருக்கிறது. சினிமாவில் நான் கவர்ச்சியாக நடிப்பதால், என்னிடம் என்ன வேண்டுமானாலும் பேசலாம் என அர்த்தம் கிடையாது. இன்ஸ்டாகிராம் மூலமாக ரசிகர்களிடம் பேசுவது எனக்குப் பிடிக்கும். சிலர், போலி கணக்கு மூலமாக வந்து தவறாக கமென்ட் செய்யும்போது கோபம் வந்துவிடும். அதுதான் அவர்கள் பாணியிலேயே பதிலடி கொடுக்கிறேன். அதுக்கு பிறகு அவர்கள் வாலாட்ட மாட்டார்கள். ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்தில் நான் நடித்தது கூட இப்படிப்பட்ட சீண்டல்களுக்கு காரணமாக இருக்கலாம். அந்த படத்தில் நடித்ததற்காக நான் வருத்தப்படுகிறேன்.
அதில் நடிக்க ஒப்புக்கொண்டது என்னுடைய தவறுதான். என்னிடம் கதை சொன்னபோது இல்லாத விஷயங்களை எல்லாம், ‘இப்படி பண்ணா நல்லாயிருக்கும், அப்படி பண்ணா நல்லாயிருக்கும்’ என்று சொல்லி படம்பிடித்தனர். படப்பிடிப்பு தளத்தில் அதை என்னால் மறுக்க முடியவில்லை. ஆனால், இனிமேல் இந்த மாதிரி தவறுகளை செய்யமாட்டேன். கவர்ச்சியை குறைத்துக்கொண்டு, நடிப்பை வெளிப்படுத்துகிற கதாபாத்திரங்களை மட்டுமே தேர்ந்தெடுப்பேன்” என்றார்.