தேவையான பொருட்கள்:
பாசுமதி அரிசி - 2 கப்
பன்னீர் - 250 கிராம் ,
வெங்காயம் - 2 (நறுக்கியது) ,
தக்காளி - 5 (நறுக்கியது) ,
இஞ்சி - 2 இன்ச் ,
பூண்டு - 4 பற்கள் ,
பச்சை மிளகாய் - 2,
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன் ,
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன் ,
மல்லித் தூள் - 1 டீஸ்பூன் ,
கிராம்பு - 3 ,
பட்டை - 1 இன்ச் ,
ஏலக்காய் - 2 ,
பிரியாணி இலை - 2 ,
மிளகு - 1 டீஸ்பூன் ,
புதினா இலைகள் - சிறிது,
நெய் - 2 டேபிள் ஸ்பூன்,
உப்பு - சுவைக்கேற்ப ,
எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை:
முதலில் பாசுமதி அரிசியை நன்கு கழுவி, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின் மிக்சர் ஜாரில், கிராம்பு, ஏலக்காய், மிளகு மற்றும் பட்டை சேர்த்து நன்கு பொடி செய்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். அடுத்து அதே ஜாரில் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி சூடானதும், வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கி, அரைத்த இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து நன்கு பச்சை வாசனை போக வதக்கவும். பிறகு அதில் தக்காளியை சேர்த்து மென்மையாகும் வரை வதக்கவும். தக்காளி நன்கு மென்மையாக வதங்கியதும், பிரியாணி இலை, மஞ்சள் தூள், மல்லித் தூள், மிளகாய் தூள் மற்றும் அரைத்த மசாலா பொடியை சேர்த்து சில நிமிடங்கள் நன்கு வதக்க வேண்டும். அதன்பின் புதினா இலைகளையும், கழுவி வைத்துள்ள பாசுமதி அரிசியையும் போட்டு ஒரு நிமிடம் வதக்கவும். பின் அதில் 3 கப் நீரை ஊற்றி, பன்னீர் துண்டுகளைப் போட்டு, தேவையான உப்பு தூவி கிளறி, குக்கரை மூடி ஒரு விசில் வந்ததும், குறைவான தீயில் 3-4 நிமிடம் வேக வைத்து இறக்கவும். விசில் போனதும் குக்கரைத் திறந்து, ஒரு முறை கிளறி விட்டால், சுவையான பன்னீர் பிரியாணி தயார்.